Published Date: March 12, 2025
CATEGORY: GENERAL

இருமொழிக்கொள்கையால் தமிழ்நாடு சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது - அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை சிறப்பாக பின்பற்றும்போது, மும்மொழிக் கொள்கை ஏன் தேவை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தேசிய கல்விக் கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்தார். 1968 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதன்முதலாக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டதாகவும், அப்போதே அறிமுகப்படுத்தப்பட்ட மும்மொழி கொள்கையை 57 ஆண்டுகளாகியும் முறையாக அமல்படுத்த முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள நிதியை வைத்து எப்படி சிறப்பான கல்வியை வழங்குவது என்பதில்தான் மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய அளவில் பிற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இருமொழிக்கொள்கையால் தமிழ்நாடு சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், வட மாநிலங்களில் இருமொழிக்கொள்கையை முறையாகப் பின்பற்றியிருந்தால் மும்மொழி கொள்கை பிரச்சனையே வந்திருக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Media: The News Minute